வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

மாலை (62) வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களைப் புழக்கத்தில் விடுவோம்!

 

ஒரு மொழியின் வளம் அஃது எத்தனை நூறாயிரம் (இலட்சம்) சொற்களைப் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்து மதிப்பிடப் படுகிறது. அத்தனைச் சொற்களுக்கும் வேர்ச்சொல் என்று ஒன்று இருக்க வேண்டும் !


இவ்வாறு பல நூறாயிரக் கணக்கில் சொற்கள் இருப்பதால்தான் தமிழ் வளமான மொழி என்று அறிஞர்களால் போற்றப்பெறுகிறது !


தமிழ் அகரமுதலியில் வேர்ச்சொல் இல்லாத ஒரு சொல் காணப்படுமேயானால் அது தமிழல்லாத பிறமொழிச் சொல்லாகத்தான் இருக்க முடியும் என்பதை நாம் உணரவேண்டும் !

 

எடுத்துக்காட்டாக வளைதற் கருத்தை உணர்த்தும் ”குல்” என்னும் வேரிலிருந்து பிறந்தது “குனி” என்னும் சொல். குல் > குன் > குனி = குனிதல் = உடல் முன்னோக்கி வளைதல். ஆனால் நம்மில் பலரும் பயன்படுத்திவரும் “ரகசியம்” என்னும் சொல்லுக்கு வேர்ச் சொல் என்ன என்பதை எவரும் சொல்ல முடியாது. ஏனெனில் இச்சொல் தமிழ்ச் சொல்லே அன்று !

 

தமிழில் வேர்ச் சொல்லினின்று பிறந்த பொருள் பொதிந்த சொற்கள் நூறாயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றுள் பலவும் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன. ஆனால் காலப் போக்கில் அத்தகைய சொற்களில் பலவும் வழக்கிறந்து போய்விட்டன. பல ஆயிரம் சொற்கள் வழக்கிலிருந்து மறைந்துகொண்டு வருகின்றன !

 

வழக்கொழிந்து போன சொற்களுக்கு எடுத்துக் காட்டுகள் பல சொல்ல முடியும். சிலவற்றை மட்டும் இங்குப் பட்டியலிட்டிருக்கிறேன் – அவ்வவற்றிற்குரிய பொருளுடன் !

 

(01) அடிபுதை அரணம் = SHOE.(பெரும்பாண்.69)

(02) அயிலகம் (MESS) = புறநானூறு.399.

(03) அல்லங்காடி (Evening Bazaar)=மதுரைக்காஞ்சி.544.

(04) அற்சிரம் (முன்பனிக் காலம்)=குறுந்தொகை.82.

(05) ஆர்வலர் (இரசிகர்)=புறநானூறு.12.

(06) இருள்மதி (அமாவாசை) = பரிபாடல்.11:37,

(07) ஈனில் (MATERNITY HOME) = குறுந்தொகை.85:3,.

(08) உள்ளீடு (INPUT) = பரிபாடல்.2.12

(09) எண்மதி (அஷ்டமி) = பரிபாடல்.11:37.

(10) கடகம் (BRACELET) = புறநானூறு.150:21,.

(11) கரி (WITNESS) = சிலப்பதிகாரம்.புகா.இந்.131,

(12) கலிங்கம் (PANTS) = புறநானூறு.383

(13) தமியன் (INDIVIDUAL) : அகநானூறு. 78:11,

(14) நாளங்காடி (DAY-BAZAAR) = மதுரைக்காஞ்சி.430,

(15) புட்டில் (BOTTLE) = திருமுரு.191.,கலித்தொகை.80:8,

(16) புனைமுடி (WIG)= பரிபாடல்.13:2)

(17) மணிக்கலன் (BOTTLE) = பரிபாடல்.10:19.

(19) மூதாளர் (SENIOR CITIZEN) = புறநானூறு.243. முல்.54

(20) விழுத்தண்டு = WALKING STICK பெரும்பாண்.170,

 

இந்தச் சொற்களில் ஏறத்தாழ எல்லாச் சொற்களுமே வழக்கொழிந்து போய்விட்டன. இலக்கியங்களில் பயின்று வரும் இச்சொற்களை நாம் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தத் தொடங்கினால் அவை புழக்கத்திற்கு வந்து உயிர்ப்பைப் பெறும். ஆனால் நாம் அதில் அக்கறை காட்டாமல் பல சொற்களை இழந்து விட்டோம் !

 

வழக்கொழிந்து போயிருக்கும் சொற்களுக்குப் புதிய பொருளைப் பொருத்தி அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் !

 

எடுத்துக்காட்டுக்கு ஒரு சில !

 

கலிங்கம்” என்னும் சொல்லுக்குப் போர்வை என்று பொருள். கலிங்கம் என்னும் சொல்லை நாம் பயன்படுத்துவதே இல்லை. இச்சொல்லுக்கு நாம் புதிய பொருளைப் பொருத்த வேண்டும். ஆங்கிலத்தில் PANT என்னும் சொல்லைத் தமிழில் “முழுக்காற்சட்டை” என்று தமிழாக்கம் செய்கிறோம். இதை மாற்றி ஏன் “கலிங்கம்” என்று சொல்லக் கூடாது ? FULL PANT = கலிங்கம்; HALF PANT = அரைக்கலிங்கம்; ¾ PANT = முக்காற் கலிங்கம்; TROUSER = அரைக்கலிங்கம்.!

 

புதிய பொருளைப் பொருத்திச் சொல்வதன் மூலம் PANT என்பதை “முழுகாற்சட்டை” என்று நீட்டி முழக்காமல் “கலிங்கம்” என்று சுருக்கமாகச் சொல்லலாம் ! தமிழனென்று சொல்லிக்கொண்டு நாணமில்லாமல் “PANT” என்னும் ஆங்கிலச் சொல்லை விடாப்பிடியாகப் பயன்படுத்தி வரும் துன்பநிலைக்கும் தீர்வுகாணலாம் !

 

இடும்பை” என்னும் சொல்லுக்குத் துன்பம் என்பது பொருள். கணினியை இயக்கிக் கொண்டிருக்கையில் அஃது இயங்காமல் நிலைக்குத்தி நின்றுவிடுகிறது .கணினி நூர்ந்து போகவும் (OFF)இல்லை, திரைக்காட்சி இயங்கவும் இல்லை. உடனே இதைச் சீராக்க TROUBLE SHOOTING என்னும் செயற்பட்டியை (MENU) இயக்கித் தீர்வைத் தேடுகிறோம் !

 

TROUBLE SHOOTING என்னும் சொல்லுக்கு எனக்குத் தெரிந்து யாரும் சரியான தமிழ்ச் சொல்லை உருவாக்கித் தரவில்லை. நாம் அதை “இடும்பைத் தீர்வு” என்னும் புதிய சொல்லால் சுட்டலாம் !

 

ஊர்ப்புறங்களில் நெல் சேமித்து வைப்பதற்கு நாரினால் செய்யப்பெற்ற தொம்பை என்னும் பெரிய கூடு அல்லது மரத்தினால் செய்யப் பெற்ற பத்தாயம் என்னும் களஞ்சியம் பயன் படுத்தப்படுகிறது. இவற்றிலிருந்து தேவைப்படுகையில், தேவையான அளவுக்கு .நெல்லைச் சொரிந்து வெளியில் எடுப்பதற்குச் “சொரிவாய்” என்னும் திறந்து மூடும் சிறு துளைவழி இருக்கும். இந்தச் ”சொரிவாய்” என்னும் சொல் கிட்டத்தட்ட வழக்கிழந்து போய்விட்டது !

 

தொம்பையிலிருந்து நெல்லைச் சொரிந்து வெளியேற்றும் செயல் புரியும் “சொரிவாய்” என்னும் சொல்லை குடிநீர்க்குழாயிலிருந்து நீரினைச் சொரியும் (வெளியில் எடுக்கவும், வேண்டாத போது அடைக்கவும் பயன்படும்) ”குழாய்த் திருகு” (TAP) என்னும் சொல்லுக்கு மாற்றாக நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது ?

 

இவ்வாறு வழக்கிழந்து போன தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து, பயன்படுத்தத் தொடங்கினால், தமிழில் சொல்வளமும் பெருகும், தேவையின்றி ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தும் அவல நிலையும் நம்மைவிட்டு நீங்கும். இதற்குத் தேவை, தமிழில்தான் பேசுவேன், தமிழில் தான் எழுதுவேன் என்னும் மனவுறுதியே !

 

நம்மிடம் இப்போது இல்லாதிருப்பது இந்த மனவுறுதியே ! மனவுறுதி இன்மையால், நாம் தமிழை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம்; தமிழுடன் பெருமளவுக்கு ஆங்கிலத்தைக் கலந்து பேசி நமது தனித் தன்மையை இழந்து “தமிழன்” என்று தலைநிமிர்ந்து சொல்லிக் கொள்ளும் தகுதியையும் இழந்து கொண்டிருக்கிறோம் !

 ----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmaill.com)

”தமிழ் மாலை” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2055, கடகம் (ஆடி) 26]

{11-08-2024}

-------------------------------------------------------------------------------------------





புதன், 7 ஆகஸ்ட், 2024

மாலை (61) ஏனிந்த மொழிக் கலப்பு ?

      

சில நேர்வுகளில் கலப்பு என்பது சுவையானது என்பதில் ஐயமில்லை. பாலுடன் தேன் கலந்தால்  இனிப்புச் சுவை கூடுகிறது. கன்னலுடன் (பாயசம்) முந்திரி கலந்தால் கன்னலின் சுவை தூக்கலாகவே தெரிகிறது. காரத்துளியுடன் (காரப்பூந்தி) வறுத்த நிலக்கடலையும் கறிவேப்பிலையும் கலக்கும் போது அந்தக் காரத்தின் சுவையே தனி தான் !

 

ஆனால் பாலுடன் உப்புக் கலந்தால் என்னவாகும் ? பாலை அருந்த முடியாத அளவுக்கு அது கெட்டுப் போகிறது ! சக்கரையுடன்  மணல் கலந்தால் அதை உணவில் சேர்க்க முடியுமா ? நமது வீட்டுக் கூடத்திற்குள் பக்கத்துத் தெரு பக்கிரியை அழைத்து வந்து பாய் விரித்துப் படுக்க வைத்தால் அந்தக் கலப்பு  நமது வீட்டாருக்கு இனிக்கவா செய்யும் ? பைத்தியக்காரன் என்றல்லவோ நம் வீட்டார் நமக்குப் பட்டம் சூட்டிச்  சினத்துடன் பார்ப்பார்கள் !

 

ஆகையால் எல்லா நேர்வுகளிலும் கலப்பு நன்மை தருவதில்லை. மொழிக் கலப்பும் அப்படித்தான் ! தமிழ்நாட்டில், ஒரு இல்லத்து  உறுப்பினர்கள்  துயிலெழுந்தது முதல் இரவு துயிலறைக்குச் செல்லும் வரை நிகழும் உரையாடல்களை உற்றுப் பாருங்கள் ! எத்துணை ஏத்துணை ஆங்கிலச் சொற்கள் ! தமிழுடன் கலந்ததமிங்கிலஉரையாடல் !

 

குட் மாணிங் டாடி !  குட் மாணிங் மம்மிகுயிலிசையாய்க் காற்றில் தவழ்ந்துவர வேண்டியவணக்கம் அப்பா “ “வணக்கம் அம்மா  என்னும் தேன் தமிழ்ச் சொற்கள் எங்கே போயின ? ”சரி, பிரியா ! சீக்கிரம் போய்பிரஷ்பண்ணிட்டு வாபூஸ்ட் கலந்து வைக்கிறேன்அம்மாவின் அன்பு மொழியில் தான் எத்தனைக் கலப்படம் !

 

தமிழில் ஆங்கிலத்தைக் கலந்துதமிங்கிலமாக்கும்தமிழ்க்குடி மக்களின் செயலைப் பாராட்டுவதா ? அல்லது பழிப்பதா ? பிரியாவின் தந்தை அலுவலகம் செல்லும் போது தனது கலிங்கத்தை  (PANT) அணிந்த பின் மேற்சட்டை பொருத்தமாக இல்லை என்று சொல்லி, பக்கத்து வீட்டுக்காரனின் மேற்சட்டையை இரவல் வாங்கி அணிந்து செல்ல அவர் மனம் ஒப்புக்கொள்ளுமா ? அந்தக் கலப்பு அவருக்கு மதிப்பைத்தான்  தருமா ?  பிரியாவின் தாய், தனது காலணியில் ஒன்றையும் பக்கத்து வீட்டுப் பாமாவின் காலணியில் ஒன்றையுமாக இணை சேர்த்து அணிந்துகொண்டு கடைத்தெருவுக்குச் செல்வாரா ?

 

பாத்ரூம்ல யார் இருக்காங்க “? எதற்கு இந்த ஆங்கிலக் கலப்பு ? இத்தகைய மொழிக் கலப்பைப் பற்றி எந்தத் தமிழனாவது என்றைக்காவது சிந்தித்திருக்கிறானா ?

 

ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்களை நாம் ஒதுக்க வேண்டியதில்லை; அச்சொற்கள் தமிழின் மொழி வளத்தைப் பெருக்கித் தமிழுக்கு வலிமை சேர்க்கும் என்று சொல்லும் அறிவுக்கொழுந்துகளும் தமிழ் நாட்டில் இருக்கவே செய்கின்றன. அவர்கள் சொல்வது சரியென்றால் அவர்கள் வீட்டு ஆட்டுக்குட்டியின் கறியுடன்  அடவியில் வாழும் குரங்குக் குட்டியின் கறியைச் சேர்த்துச் சமைத்து உண்பார்களா ? அவர்கள் வீட்டுப் பெண்ணுக்கு ஆப்பிரிக்க மாப்பிள்ளையை இணை சேர்த்தால் அழகாக இருக்கும் என்று  அவர்கள் திருமணத்திற்கு இசைவு தெரிவிப்பார்களா ?

 

தாம் அணியும் சட்டை தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், தாம் பேசும் மொழியும் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை ? தமிழுடன் ஆங்கிலம் கலந்தால் தமிழ் தன் தூய்மையை இழந்துவிடுகிறது என்பது அவர்களுக்கு ஏன் புரிவதில்லை ?

 

நம் வீட்டு அடுக்களை நம் அன்னைக்கு மட்டுமே -  அவளுக்குப் பின் நம் மனைவிக்கு  மட்டுமே - உரிமை உடையது; அதில் அயலூர்ப் பெண்ணுக்கு இடம் தருபவன் அறிவார்ந்த மனிதன் ஆவானா ? நம் வீட்டுத் துயிலறையில் நம் மனைவி மட்டுமே அமரமுடியும்; அங்கு அயலான் வீட்டுப் பெண்ணுக்கு என்ன  வேலை ?

 

நமது நாக்கு, நமது தாய்மொழியான தமிழைப்  பெற்றெடுக்கும் கருவறை; அங்கு அயல்மொழியான ஆங்கிலம்  பிறந்து வளர்ந்து வாழ்ந்து நம் தமிழையே அழிக்கத் துணிகையில் அதற்கு இடந்தருதல் நமது முட்டாள்தனமல்லவா ? அயல் மாநிலமானாலும் சரி, அயல் நாடானாலும் சரி, அந்த மண்ணுக்குரிய மொழி அம்மண்ணின் மைந்தர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரிமை படைத்த மொழி. அம்மொழி நம் வீட்டுக் கூடத்திற்குள் வந்து அட்டாணிக்கால் போட்டு அமர்ந்து கொண்டு நமது தாய் மொழியான தமிழைச் சிதைக்க நாம் ஒருபோதும் இடந்தரலாகாது !

 

ஆங்கிலேயர்களின் நாட்டிற்குச் சென்று அவர்களிடம் நாம் தமிழில் பேச முயல்வது பித்துக் கொளித்தனம் ! ஆனால், நாம் நம்மவர்களிடமேதமிழ் தெரிந்த நம்மவர்களிடமே - வெட்கமில்லாமல் அயல் மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறோம் -  ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறோம். இதுவும் ஒருவகையான பித்துக்கொளித்தனம் அல்லவா ? தமிழ் நாட்டிற்குள் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதும், ஆங்கிலம் கலந்து பேசுவதும், தமிழின் உரிமையை நாம் விட்டுக்கொடுப்பதற்குச் சமம்அல்லவா ?   சுரணையுள்ள தமிழன் இத்தவறைச் செய்யலாமா ?

 

உரிமையை விட்டுக்கொடுப்பவன் அவன் எத்துணைப் படித்தவனாக  இருந்தாலும்  முட்டாளே ! மொழியுணர்வு இல்லாத முட்டாளாகத் தமிழன் இன்னும் இருக்கத்தான் வேண்டுமா ? “தமிங்கிலம்நமக்குத் தேவையில்லை; ஆங்கிலம் நம் வீட்டு அடுக்களைக்குள் ஆட்சி செலுத்தவும்  தேவையில்லை !

 

சுரணையுள்ள தமிழனாக இனி வாழ்வோம்; உரிமைகளை விட்டுக்கொடுத்து உயிர் வாழ்தலும் ஒரு வாழ்க்கையா ? ஆங்கிலம் கலவாமல் பேசுவோம் ! தமிழனாக வாழ்வோம் ! ஆங்கிலேயனின் குருதி நம் உடலில் ஓடுகிறது என்னும் பழிச்சொல்லுக்கு இடந்தராமல் வாழ்வோம் !

 

இன்றே உறுதி எடுத்துக்கொள்வோம் ! தமிழும் ஆங்கிலமும் கலந்த கலவையான தமிங்கிலம்என் நாவில் இனித் தவழாது என்று உறுதி எடுத்துக் கொள்வோம் !. உறுதி எடுத்துக் கொள்ள மனமில்லையேல்நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்புஎன்று நம் முன்னவன் பாரதி சொல்லிச் சென்றது நம்மைப் பார்த்துத்தான் என்று நாளை இந்த உலகம் நம்மை ஏசும் !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2055, கடகம் (ஆடி) 16]

{01-08-2024}

----------------------------------------------------------------------------------------