வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

மாலை (31) ஐந்திறம் - நாண்மீன்களின் தமிழ்ப் பெயர்கள் !

தமிழில் விண்மீன்களின் பெயர்கள் !

 

வான மண்டலத்தில் மீன் (நட்சத்திரம்) கூட்டங்கள் இரவில் ஒளிர்வதைப் பார்த்திருப்பீர்கள். நம் முன்னோர்கள் அவற்றை அடையாளம் கண்டு, 27 மீன்களாகப் பகுத்திருக்கிறார்கள். 27 மீன்களுக்கும் பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்த தமிழ்ப் பெயர்களும், அவற்றின் பொருளும் அவற்றுக்கு இக்காலத்தில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களும், வருமாறு :-

          

--------------------------------------------------------------------------------

          

  தமிழ்......................பொருள்..................வடமொழி

         

---------------------------------------------------------------------------------

 

புரவி...........................குதிரை.........................அசுவதி

அடுப்பு......................அடுப்பு..........................பரணி

ஆரல்...........................நெருப்பு.......................கார்த்திகை

சகடு.............................சக்கரம்........................ரோகிணி

மான்றலை...............மானின் தலை..........மிருகசீரிடபம்.

மூதிரை......................வீணை.........................திருவாதிரை

கழை...........................புல்லாஙகுழல்..........புனர்பூசம்

காற்குளம்................கொடிறு(குறடு).........பூசம்

கட்செவி....................பாம்பு............................ஆயில்யம்

கொடுநுகம்............நுகத்தடி........................மகம்

கணை.......................அம்பு................................பூரம்

உத்தரம்....................ஊழித் தீ.........................உத்தரம்

கை.............................கரங்கள்.........................அஸ்தம்

அறுவை..................ஆடை...............................சித்திரை

விளக்கு...................அகல்................................சுவாதி

முறம்........................சுளகு................................விசாகம்

பனை.......................பனைமரம்.....................அனுஷம்

துளங்கொளி.......எரியொளி.....................கேட்டை

குருகு.......................கொக்கு............................மூலம்

உடைகுளம்...........வழியும்குளம்...............பூராடம்

கடைக்குளம்.........குளத் துறை................உத்திராடம்

முக்கோல்...............ஊன்றுகோல்.............திருவோணம்

காக்கை...................காகம்.............................அவிட்டம்

செக்கு.......................காணம்...........................சதயம்

நாழி.........................அளக்கும் படி...............பூரட்டாதி

முரசு.........................பேரிகை.........................உத்திரட்டாதி

தோணி.......................படகு...................................ரேவதி

 

---------------------------------------------------------------------------------

 

[வழக்கொழிந்து போயிருந்த  புரவி முதல் தோணி வரையிலான 27 மீன்கள் பெயரையும்   பாவாணர் அவர்கள் மீட்டெடுத்துத் தந்துள்ளார்].

 

---------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:-

--------------------

 

1) மீன்கள் எல்லாமே ஒற்றை மீன்கள் (SINGLE IN NUMBER)  அல்ல. 6 மீன்கள் சேர்ந்ததே அசுவதி. பரணியில் 3 மீன்கள். 6 மீன்கள் சேர்ந்த கூட்டத்தின் பெயரே கார்த்திகை. பல மீன்கள் சேர்ந்த கூட்டமே அவிட்டம். திருவாதிரை,  சுவாதி போன்ற சில மட்டுமே  ஒற்றை மீன்கள் !

 

2).அசுவமேத யாகம் என்பது பற்றிப் படித்திருப்பீர்கள். இதில் குதிரையை வெட்டிப் பலி கொடுப்பார்கள். அசுவம் என்றால் குதிரை. அசுவம் என்ற சொல்லின் அடிப்படையில் உருவான பெயர்தான் அசுவதி”, ”அசுபதி”,  அஸ்வினி”, ”அசுவினிஎல்லாம்.  குதிரையைத் தமிழில் புரவிஎன்போம். எனவே அசுவதிஎன்பது தமிழில் புரவிஆகிறது !

 

3) வடமொழியில் மீன் (STAR) பெயர்கள் இவ்வாறு உருவானவையே. வடமொழிச் சொல்லுக்கு என்ன பொருளோ, அதே பொருள் தரும் சொல் தான் இப்போது தமிழில் தரப்பட்டுள்ளது !

 

4) பண்டைக் காலத்தில் தமிழில் வழங்கிவந்த மீன் பெயர்கள் எல்லாம் வடமொழி மயமாகி விட்டன. ஆடு இயல் அழல் குட்டத்து ஆரிருள் அரையிரவில் முடப் பனையத்து வேர்முதலாக் கடைக்குளத்து கயம் காய.....என்பது புறநானூற்றுச் செய்யுள் (229). இதில் வரும் அழல்கார்த்திகை ஆகிவிட்டது.  பனைஅனுஷம் ஆகிவிட்டது. கடைக்குளம்உத்திராடம் ஆகிவிட்டது. 


இப்படித் தான் 27 மீன்களின் தமிழ்ப் பெயர்களும்  மறைக்கப்பட்டு வடமொழி திணிக்கப் பட்டுவிட்டது. வடமொழித் திணிப்புக்கு சோதிடம்ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது இன்றும் பயன்படுத்தப் படுகிறது எதிர் காலத்திலும் பயன்படுத்தப்படும். தமிழர்கள் இப்போதாவது விழித்துக் கொள்வார்களாக !

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ப் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 17]

{02-08-2022}

--------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக