வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

புதன், 26 அக்டோபர், 2022

மாலை (47) தென்னந் தோப்பில் குழந்தையின் அழுகை யொலி !

அதிருது !!!!!!

எச்சரிக்கை !!

பயந்த குணம் உள்ளவர்கள் தயவுசெய்து 

இதைப் படிக்க வேண்டாம் !!

எங்க ஆத்தூர் அருகில்

உள்ள ஒரு சிற்றூர் !

தென்னந்தோப்புகளும்

பாக்குத் தோட்டங்களும்,

மாமரத் தோட்டங்களும்

நிறைந்தபகுதி அது !

நிலத்தை ஒட்டிய பகுதியில்

வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம்

வாழ்ந்துகொண்டு இருந்தது !

நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி !

அவர்களுக்குப் பத்து அகவையில்

ஒரு பெண் குழந்தை !

ஒரு நாள் அந்த வீட்டைச் சேர்ந்த

பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு,

மாடுகளுக்குப் புல் அறுப்பதற்காகத்

தென்னந்தோப்புக்குச் செல்கிறாள் !

அவள் புல் அறுத்துக்கொண்டு

இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம்

கொஞ்சமாக கேட்கிறது !

அவள் பதற்றத்துடன், எங்கிருந்து வருகிறது என்று தேட, 

கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தையின் 

அழுகுரல் நின்று விடுகிறது !

திரும்பவும் மீண்டும் ஒரு முறை

அதே அழுகுரல் கேட்கிறது !

பயத்துடன் அந்த அழுகுரல் வரும் 

திசையை நோக்கி நடக்கிறாள் !

ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த 

அழுகுரல் வருவதை கவனிக்கிறாள் !

தென்னை மரத்தில் ஏதாவது

குழந்தை இருக்கிறதா என்று மேலே 

பார்த்தபடி தேடுகிறாள் !

எந்த குழந்தையும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை !

ஒரு நாளைக்கு நாலைந்து முறையாவது அந்த அழுகுரல்

கேட்டுக்கொண்டே இருக்கும் !

பயந்து போய் தன்னுடைய

கணவனுக்கு சொல்கிறாள் !

அவன் முதலில் ஏதாவது

உன்னுடைய மனமயக்கமாக (பிரமையாக) 

இருக்கும் என்று பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்

இருக்கிறான் !

அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டுப்  படுக்கும்போது,

இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் ஒரு முறை 

அந்த குழந்தையின் அழுகுரல்

கேட்கிறது !

அவன் இப்போது தான் மனைவி சொன்னதை நம்புகிறான் !

கையில் பெரிய தடவிளக்கை (டார்ச் லைட்டை) 

எடுத்துக்கொண்டு அந்த தென்னந்தோப்புக்குள்

நுழைகிறான் !

அவனுடைய மனைவி வேண்டாம் என்று தடுக்கிறாள் !

ஆனாலும் அவன் துணிச்சலானவன் என்பதாலும் 

அதே ஊரில் சிறுவயதில் முதல் வாழ்ந்து 

பழக்கப்பட்டவன் என்பதாலும் துணிச்சலாகத் தோப்புக்குள் 

செல்கிறான் !

அவளும் கணவனுக்கு ஏதாவது

ஆகிடுமோ என்று பயந்து

பின்னாலேயே போகிறாள் !

அவளுக்கு கேட்ட அதே அழுகுரல் அதே தென்னை 

மரத்திலிருந்து கேட்கிறது !

அவன் கீழிருந்தபடி உயரமான

அந்தத்  தென்னை மரத்தில்

தடவிளக்கை (டார்ச்) அடித்துப் பார்க்கிறான் !

அந்த மரத்தில் இருந்து

ஏதோ ஒரு பறவை மட்டுமே

பறந்து செல்கிறது !

அருகில் வரும் வரை கேட்டுக் கொண்டிருந்த

அந்த அழுகைக் குரல்

இப்போது கேட்கவில்லை !

போலாம் வாங்க என்று மனைவி அழைத்ததால்

இருவரும் வீடு திரும்புகிறார்கள் !

அடுத்த நாள் அவளுடைய

அண்ணனுக்கு இந்தச் செய்தியைச்

சொல்கிறாள் !

மீண்டும் அழுகுரல் வந்தால்

எனக்கு எழினி அழைப்புச் (போன்) செய்யுங்கள் !

நான் ஆட்களோடு வந்து

பார்க்கிறேன் என்று சொல்கிறான் !

அவள் அந்த அழுகுரலுக்குப்

பயந்து அந்தத்  தோப்பின் பக்கமே

போகாமல் இருக்கிறாள் !

அடுத்த நாள் இரவு,

எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது 

எட்டு மணிக்கெல்லாம் அந்த அழுகைக் குரல் கேட்கிறது !

அவளும் அண்ணனுக்கு

எழினி அழைப்பு (போன்) செய்கிறாள் !

அவளுடைய அண்ணன் நாலைந்து

ஆட்களை அழைத்துக்கொண்டு வருகிறான் !

அங்கே இருக்கும் சில மரக் கட்டைகளில் துணியை

இறுக்கமாக சுற்றிக்கொண்டு

அவற்றின் மீது ண்ணெய் ஊற்றிப்

பற்றவைத்துக் கொண்டு அந்தத் தென்னந்

தோப்பிற்கு கிளம்புகிறார்கள் !

வீட்டில் இருக்கும்போது

குறைவாகக்  கேட்கின்ற அந்த

அழுகைக் குரல்  

அருகே செல்லச் செல்ல அதிகமாகக் கேட்கிறது !

பின் கொஞ்ச நேரத்திற்கெல்லாம்

முழுவதும் நின்றுவிடுகிறது !

அந்தக்  குறிப்பிட்ட மரத்தின்

அருகில் சென்று தீப்பந்தத்தை காட்டி

மேலே சுற்றிச் சுற்றிப்

பார்க்கிறார்கள் !

எதுவுமே தெரியவில்லை !

அழுகுரலும் நின்றுவிட்டது !

தீயைப் பார்த்தால் எந்தப் பேயாக

இருந்தாலும் பயந்துவிடும் என்று

கூட்டத்தில் இருந்த நாலு பேரில் ஒருவன்

உறுதியாக கூறுகிறான் !

அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே

மீண்டும் அழுகுரல் சத்தமாகக் கேட்க

தொடங்குகிறது !

எல்லோருமே பயந்து விடுகிறார்கள் !

அந்த இடத்தை விட்டு

உடனே ஓடிவந்து விடுகிறார்கள் !

அடுத்த நாள் ஒரு பெரிய

சாமியாரை அழைத்துவந்து

அந்தத்  தென்னை மரத்தைச் சுற்றி

மஞ்சள் கயிற்றால் கட்டுக் கட்டி,

ஒரு தென்னங்கன்றுக்கு

பாலூற்றி முழுக்காட்டி (அபிஷேகம் செய்து)

நிறைய சடங்குகள் எல்லாம்

செய்து, பூசைகள் எல்லாம்

செய்துவிட்டு, இனிமேல் நிச்சயம் அந்த அழுகுரல் கேட்காது 

என்று சொல்லி விட்டுப் போகிறார் !

அவர்களும் நிம்மதியாகத்

தூங்கப் போகிறார்கள் !

ஆனால், அடுத்த நாள் விடியற் காலையிலேயே

அந்த அழுகுரல்கேட்கத் தொடங்குகிறது !

இந்த முறை, தொடர்ந்து

கேட்டுக்கொண்டே இருக்கிறது !

இடைவெளி இல்லாமல்

திரும்பத் திரும்பக் கேட்கிறது !

தோப்பின் பக்கம் யாரோ

ஆள் நடமாட்டம் இருப்பது போல் அவர்களுக்கு தெரிய,

பயமாக இருந்தாலும் யாரென்று பார்ப்பதற்காக,

கொஞ்சம் துணிச்சலை  

வரவழைத்துக் கொண்டு போகிறார்கள் !

அருகில் போகப்போக மரத்தின் மேல் ஏதோ ஒரு உருவம்

இருப்பது போல் தெரிகிறது !

தென்னை ஓலைகளும் மட்டையும் அசைகின்ற 

ஒலி கேட்கிறது !

திடீரென்று மரத்திலிருந்து

ஒரு உருவம் சரசரவென இறங்கிக் கீழே வருகிறது !

இவர்கள் நடுங்கிப்போய்ப் பார்க்க,

மரத்திலிருந்து இறங்கிய தேங்காய் பறிக்கும் ஒருவன்,

ஒண்ணும் இல்லம்மா !

நாலு நாள் முன்னாடி தேங்காய்

பறிக்க ஏறும்போது எழினியை (போனை)

மேலயே விட்டுட்டு வந்துட்டிருக்கேன் !

எங்கடா காணோம் காணோம்னு

நாலு நாளா தேடிட்டு இருந்தேன் !

ஒவ்வொரு தோப்பா போயி

இன்னொரு எழினியை இயக்கி இயக்கி

(போன் பண்ணி

போன் பண்ணி)  என் எழினியைத் தேடிட்டு இருந்தேன் !

கடைசியில உங்க தோப்புலயே

இருந்திருக்கு !

என்று அவன் மகிழ்ச்சியுடன் சொல்ல,

அதற்குள் மீண்டும் அந்த

அழுகுரல்  (ரிங்டோன்) ஒலிக்க

அதன் ஆளியை (சுவிச்) இயக்கி (அட்டென்டு செய்து)

எழினி (போனு) கிடைச்சிடுச்சிம்மா !

கடைசியில நம்ம துர்கா அக்கா

தோட்டத்துல தான் இருந்திருக்கு !

எழினியை (போனை) பார்த்த பின்னாடிதான்

எனக்கு உயிரே வந்திருக்கு !

என்று அவன் பேசியபடி

நடந்துசெல்ல ..!

அடப் பாவி !

அழுகுரலைஅழைப்பொலியாக (ரிங்டோன்) வைத்து,

எங்களை எல்லாம் நடுநடுங்க வச்சிட்டியே !

நீ நல்லா இரு !

ஊரில் எல்லோரும் இப்படியே அழைப்பொலியை வச்சுக்கங்க !

ஊரும் உருப்படும் ! நாடும் நல்லா இருக்கும் ! என்று

அங்கலாய்த்தபடியே

அனைவரும் கலைந்து சென்றனர் !

 உங்களை போலத்தான் நானும் பயந்து பயந்து படிச்சேன் !

 ----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmai.com)

ஆட்சியர்,

தமிழ் மாலைவலைப்பூ,

[திருவள்ளுவரண்டு: 2053, துலை (ஐப்பசி) 09]

{26-10-2022}

--------------------------------------------------------------------------------------------------



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக